கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள பொலிதீன் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து குறித்த இளைஞன் பொகவந்தலாவைக்குச் சென்றிருந்த நிலையிலேயே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இளைஞன் ஹம்பாந்தோட்ட சுயதனிமை படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இளைஞன் தானாக முன்வந்து பொகவந்தலாவை சுகாதார அலுவலகத்தில் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் இன்று கிடைத்த மருத்துவ அறிக்கையிலே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள பொலிதீன் கடையொன்றில் பணிபுரிந்த குறித்த இளைஞன் கடந்த 10 ஆம் திகதி கொழும்பிலிருந்து பஸ்ஸில் ஹற்றன் வரை பயணித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தனியார் பஸ்ஸொன்றில் பொகவந்தலாவை சென்று அங்கிருந்து முச்சக்கரவண்டியில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், பொகவந்தலாவை மேல்பிரிவை சேர்ந்த இவர் தீபாவளி பண்டிகையை தனது நண்பர்கள் உறவினர்களுடன் கொண்டாடியுள்ளமை தெரிவந்துள்ளது.
தொற்றுக்குள்ளான 19 வயதுடைய குறித்த இளைஞனை ஹம்பாந்தோட்ட சுயதனிமை படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பை பேணிவர்களின் தகவல்கள் பெற்று அவர்களையும் சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.