தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி, அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி சுவிஸ் ஜெனிவா நகரத்தில் மாபெரும் போராட்டமொன்று நடத்தப்பட்டது.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், “பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங் கீ மூன், நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு, தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.
அதேவேளை புலம்பெயர் தமிழ் மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
மேலும், மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும்.
ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.