மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் – சுகுணன்

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விசேட நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை)  அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் நிலைமை மிக மோசமாக அனுபவித்து தற்போது திருப்திகரமான நிலைக்கு வந்திருக்கிறோம் என்று கூறமுடிகிறது.

இதுவரை 23000 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டதுடன் 307 தொற்றாளர்கள் மரணித்துமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதியப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் டெல்டா,அல்பா போன்ற பல வேரியன்ட்கள் அடையாளப்படுத்தப்பட்டு வந்திருந்தது. தற்போது ஒமிக்ரோன் தொற்று காணப்படுகிறது. இந்தநிலையில் நாம் அடுத்தகட்ட நகர்வுக்குள் நுழைந்துகொண்டு இருக்கின்றோம்.

பொருளாதார,சமுக பிறழ்வுகளில் இருந்து வெளிவரவேண்டிய தேவை இருக்கின்றது. இதனால் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்து தடுப்பூசிகளை பெற்று நிரந்தர தீர்வை நோக்கி செல்ல வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் கட்ட தடுப்பூசிகள் 97 வீதமானவர்களுக்கும் இரண்டாம்கட்ட தடுப்பூசிகள் 87 வீதமானவர்களுக்கும் வழங்கியிருக்கின்றோம். இது இலங்கையின் முதல் ஜந்து மாவட்டங்களுக்குள் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது.

மூன்றாம்கட்ட தடுப்பூசி வழங்களில் மிகுந்த கீழ் மட்டத்தில் காணப்படுகிறது. அதாவது 25 வீதமானவர்களே பெற்றிருக்கின்றதுடன் இது இலங்கையின் கடைசி 5 மாவட்டங்களில் ஒரு இடத்தை மட்டக்களப்பு மாவட்டம் இடம்பெறுகின்றது.

இதனால் இராணுவத்தினரின் சுகாதார துறையினரும் தற்போது தடுப்பூசி ஏற்றும் களத்தில் இறங்கி உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த காலத்தில் மழை வீழ்ச்சி ஏற்படும் காலம் இக்காலத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கும். கடந்த வருடம் 2800 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் இந்த வருடம் மிக குறைவாக பதிவாகியுள்ளது. இதுவரை ஜனவரி பிப்ரவரி மாதத்திற்குள் 75 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றார்கள். எதுவிதமான மரணங்களும் டெங்கினால் பதிவுசெய்யப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டம் தற்பொழுது புதுவிதமான ஒரு அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது அதாவது தொழுநோய் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு இருக்கின்றது.

கடந்த வருடத்தில் 731 நோயாளர்கள் இலங்கை பூராக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். இதனுள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 110 நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து 30 நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் இவற்றுள் 18 நோயாளிகள் மட்டக்களப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

சுகாதாரத் துறையினர் இதனை ஒரு பாரிய பிரச்சினையாக அடையாளப்படுத்தி இருக்கின்றோம.; கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நிறைவுற்றதன் பின்னர் தோல் நோயினை முகாமைத்துவம் செய்வதற்கான செயற்பாடுகளை நாங்கள் அதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்.

தொழுநோயின் சிகிச்சை சம்பந்தப்பட்ட விடயத்தில் இலங்கையில் காணப்படுகின்ற தொழுநோய் வைத்தியசாலையில் ஒன்றாக மாந்தீவு வைத்தியசாலை காணப்படுகின்றது. தற்போதைய நிலைமையில் தொழு நோயாளர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் முறையே காணப்படுகின்றது.

அதாவது தனிமைப்படுத்தி பராமரிப்பின்றி என்ற விடயம் ஒரு காலத்தில் காணப்பட்டாலும் தற்போது காணப்படுவதில்லை. ஆகவே அதனை நாங்கள் வைத்தியசாலையை மீண்டும் புனரமைத்து கொண்டு செல்லும் திட்டம் இப்போது இல்லை.

தொழு நோயாளர்கள் அந்த வைத்தியசாலையில் காணப்பட்டதன் மூலம்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் பலரிடம் காணப்படுகின்றது. ஆகவே எதிர்காலத்தில் நாங்கள் இதனை கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துடன் இணைந்து சில ஆராய்ச்சிகளை செய்வதற்கு எதிர்பார்த்து இருக்கின்றோம்.