அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர்.
தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு...
தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த ஊழியர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எங்களுக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அதிகாரிகள் தவறிவிட்டதாலேயே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
எங்களது சீருடைக்கான கொடுப்பனவை அதிகரிக்கக் கோரியுள்ளோம். சைக்கிள்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரியுள்ளோம்.
அத்துடன், ஊழியர்களின் ஒப்பந்தங்களை நிரந்தரமாக்குமாறு கோரியுள்ளோம். ஆனால், அதிகாரிகளும், அமைச்சரும் கைரேகை மற்றும் மேலதிக நேரம் பற்றி பேசுகிறார்கள்.
சீருடைகளைத் தைப்பதற்காக 600 ரூபாவும் சைக்கிள்களுக்கான கொடுப்பனவாக 250 ரூபாவும் வழங்கப்படுகின்றது. அஞ்சல் தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பித்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.