சர்வதேச நீதி கோரி மக்கள் எழுச்சி பேரணி.
எதிர்வரும் ஆகஸ்ட் 30, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு...
எதிர்வரும் ஆகஸ்ட் 30, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கில் சர்வதேச நீதி கோரி மக்கள் எழுச்சி பேரணி முன்னெடுக்கப்படும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இன்று (25 ஆம் திகதி) மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசினார் அவர். கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக வீதிகளில் போராடியும், உலக நாடுகளின் கவனத்திற்கு விவகாரம் கொண்டுசெல்லப்பட்டும், நீதி கிடைக்காத நிலை தொடர்கிறது என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இவ் மக்களின் எழுச்சி பேரணி ஆகஸ்ட் 30 திகதி யாழ்ப்பாணத்தில் காலை 10 மணிக்கு கிட்டுப் பூங்கா முன்பாக ஆரம்பமாகி இப் பேரணி செம்மணி வரை செல்லும். மட்டக்களப்பிலும் அதே நாளில் இத்தகைய பேரணி நடைபெறவுள்ளது.
“செம்மணியில் காணப்பட்ட மனித புதைகுழிகள், எங்கள் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் என்ன நடந்தது என்ற கேள்விகளை மேலும் தீவிரமாக்குகின்றன. நாம் இன்று நிலைத்து நிற்கும் நம்பிக்கை – அவர்கள் எங்கேயோ உயிருடன் இருக்கிறார்கள் என்பதுதான்,” என அவர் குறிப்பிட்டார்.
சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை போராளிகள், தேசிய உணர்வுடைய அனைத்து மக்களும் இந்தப் பேரணிக்கு ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்திய அவர், “நாம் தனியாக போராடுவதால்தான் இவ்வளவு காலமாக நீதி மறுக்கப்படுகிறது” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.