IPL-ல் ஓய்வை அறிவித்தார் – அஸ்வின்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
– இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின்,

“ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு புதிய ஆரம்பம் இருக்கும் என்பார்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் வீரராக எனது காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடும் எனது காலம் இன்று தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடன் பணியாற்றிய அனைத்து அணிகளுக்கும், ரசிகர்களுக்கும், ஐ.பி.எல் – பி.சி.சி.க்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் என பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
தனது ஐ.பி.எல் பயணத்தில், 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.