மன்னார் நகரசபை புதிய செயலாளர் ஆணவ பேச்சு

மன்னார் நகர சபை எல்லைக்குள் மக்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில்

Published September 2, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

மன்னார் நகர சபை எல்லைக்குள் மக்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாமை குறித்து நகரசபை செயலாளரிடம் முறையிட சென்றால் ‘கண்டவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது’ என மன்னார் நகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தரை முறைப்பாடு மேற்கொள்ள சென்றவருக்கு முன்பு நகரசபை செயலாளர் ஆணவத்துடன் பேசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் நகரசபைக்கு சொந்தமான நகரசபை பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் காணப்படும் குறித்த குறைபாட்டை நிவர்த்தி செய்யுமாறு கோரி, எழுத்து மூல முறைப்பாடு ஒன்று மன்னார் நகரசபைக்கு வழங்கப்பட்ட நிலையில் அவை தொடர்பாக அனுமதி கிடைக்கப் பெற்றும் எந்தவொரு செயற்பாடும் இடம்பெறவில்லை .

இவ்வாறான நிலையில், குறித்த விடயம் தொடர்பில் குத்தகைதாரர் நகரசபை செயலாளரை சந்தித்து முறையிட சென்ற நிலையில் நகரசபை செயலாளர் உரிய விதமாக பதிலளிக்காமல் நகரசபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தரை அழைத்து மரியாதை குறைவாக நடந்து கொண்டதுடன், உங்களால் கண்ட கண்டவர்கள் என்னிடம் கேள்வி கேட்பதாக ஆணவமாக பேசியுள்ளார்.

அத்துடன் முறைப்பாடு மேற்கொள்ள சென்றவரிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

குறித்த புதிய செயலாளர் தொடர்ச்சியாக நகரசபை உத்தியோகஸ்தர்களுடன் முரண்படுவதுடன் முறைப்பாடுகள் மேற்கொள்ள வரும் பொதுமக்களிடமும் அவமரியாதையாக நடந்து கொள்வதாகவும், நகரசபை தொடர்பில் வழங்கப்படும் பல்வேறு முறைப்பாடுகளை நிறைவேற்றாமல் கிடைப்பில் வைத்துள்ளதாக மன்னார் நகர பகுதியில் நகரசபைக்கு சொந்தமான நிறுவனங்களை குத்தகைக்கு பெற்று நடத்தும் குத்தகைதாரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *