கிழக்கில் நீதிக்கான சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம் – சாணக்கியன் எம்.பி பங்கேற்பு. #Video

கிழக்கில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட...

Published October 2, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

கிழக்கில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை (27) அன்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று புதன் கிழமை(1) மாலை ஐந்தாவது நாளில் நிறைவடைந்தது.

இறுதிநாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் திருக்கோவில் நாவிதன்வெளி காரைதீவு ஆலையடி வேம்பு தவிசாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கிழக்கின் மூன்று மாவட்டங்களின் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்தியான் தேவி, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, ஆகியோர் ஐ.நாவுக் கான மகஜரை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் தவிசாளர்களிடம் வழங்கி வைத்தனர்.

மேலும், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவன் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட உறவுகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் “ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறி முறையை நிராகரிக்கின்றோம்” “தமிழின வழிப்பு வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம்” எனும் தொனிப் பொருளுடன் இப் போராட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *