முழு நாடுமே ஒன்றாக -ஜனாதிபதியின் தலைமையில்

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதியின் தலைமையில்

Published October 18, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள தேசிய பேரழிவான போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் முதன்முறையாக இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான கடந்த 13 ஆம் திகதி ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு த் திட்டத்திற்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டதுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய செயற்பாட்டுச் சபையை நிறுவ முன்மொழியப்பட்டது.

அதன்படி, கூடிய தேசிய செயற்பாட்டு சபை, போதைப்பொருள் வலையமைப்பை ஒழித்தல், அதற்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பைப் பெறுதல், பொதுமக்களை அறிவூட்டுவதற்காக வெகுஜன அமைப்புகளின் பங்களிப்பு மற்றும் ஊடக பிரச்சாரத்தை செயல்படுத்துதல் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தியது.

இந்த செயற்பாட்டு சபையை நிறுவுவதன் பிரதானமான நோக்கத்தை விளக்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் அச்சுறுத்தலால் இளைஞர் சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்க்கை தற்போது ஆபத்தில் உள்ள விதம் மற்றும் அது எவ்வாறு ஒரு சமூக-பொருளாதார பேரழிவாக மாறியுள்ளது என்பது குறித்து எடுத்துரைத்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும், முழு நாட்டையும் ஒன்றிணைக்கும் இத்தகைய விரிவான திட்டத்தைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் இந்த நிகழ்வில் பங்கேற்ற மதத் தலைவர்கள் பாராட்டினர்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, விமானப்படைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் வாசுபந்து எதிரிசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பி.ஏ.கே.எஸ்.பி. பானகொட, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உதித கயாஷான் குணசேகர,லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் காமினி வருஷமான, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹான் டி சில்வா மற்றும் பாதுகாப்புப் படை பிரதானிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகத் தலைவர்கள், கலைஞர்கள், சுகாதாரத் துறை பிரதானிகள் மற்றும் சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *