சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல்கள் திருட்டு
வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு ஆலயத்தின் பின் கதவு வழியாக உள்நுழைந்த திருடர்கள் 6 உண்டியலை உடைத்து அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இதில் திருடப்பட்ட மூன்று உண்டியல்களை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தின் பின்புறத்தில் நீரோட்டம் கொண்ட கங்கையில் வீசி சென்றுள்ளனர்.
ஆலயத்தில் உள்நுளைந்த திருடர்கள் தங்களது உருவங்கள் பதிவாகாமல் இருக்க ஆலயத்தில் பிரதான காரியாலயத்தில் முழு ஆலய வளாகத்தை கண்காணிக்கும் சி.சி.டி.வி. கெமராவின் முழு இணைப்பையும் துண்டித்து சி.சி.டி.வி. காணொளிகளை சேமிப்பு செய்யும் பதிவு கருவிகளையும் , பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் திருடி சென்றுள்ளனர்,
தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா தடயவியல் பொலிஸார் கைரேகைகளை பதிவு செய்து, ஆலயத்தில் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கெமரா பதிவுகளை கொண்டும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தடவியல் பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.