இலங்கை உட்பட அமெரிக்க தூதுவர்கள் திரும்ப அழைக்க முடிவு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட, பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் அமெரிக்கத் தூதுவர்கள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரிகள் சுமார் 30 பேரை பதவியிலிருந்து திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Published December 22, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட, பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் அமெரிக்கத் தூதுவர்கள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரிகள் சுமார் 30 பேரை பதவியிலிருந்து திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கை வழிமுறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் நபர்களின் மூலம் அமெரிக்காவின் வெளிநாட்டு இராஜதந்திர கொள்கைகளை செயல்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக, இலங்கை உட்பட 29 நாடுகளில் பணியாற்றி வரும் அமெரிக்கத் தூதுவர்கள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரிகளின் பதவிக்காலம், வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைவதாக அமெரிக்க அரசாங்கம் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அதிகாரிகள் அனைவரும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் காலகட்டத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதுடன், இதுவரை அவர்கள் தங்கள் பதவிகளில் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையின் கீழ், ஆபிரிக்காவைச் சேர்ந்த 13 நாடுகள், ஆசியாவைச் சேர்ந்த 6 நாடுகள், ஐரோப்பிய நாடுகள் 4, மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் 2, மேலும் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைச் சேர்ந்த 2 நாடுகள் ஆகியவற்றின் அமெரிக்கத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இவ்வகையான பதவி மாற்றங்கள் எந்தவொரு புதிய நிர்வாகமும் பொறுப்பேற்கும் போது நடைமுறையில் இடம்பெறும் ஒரு வழக்கமான செயல்முறையாகும் (Standard process) என விளக்கமளித்துள்ளது.

மேலும், ஒரு தூதுவர் என்பது ஜனாதிபதியின் தனிப்பட்ட பிரதிநிதியாக அந்தந்த நாட்டிற்கு நியமிக்கப்படுபவர் என்றும், தமது கொள்கைகளையும் அரசியல் முன்னுரிமைகளையும் செயல்படுத்தும் நபர்களை வெளிநாடுகளில் நியமிப்பது ஜனாதிபதியின் அதிகார வரம்புக்குள் வரும் விடயம் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *