இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (23) முற்பகல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர்களையும் சந்திக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று பிற்பகல், இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக எஸ். ஜெய்சங்கர் மேற்கொள்வதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை மேலும் வலுப்படுத்துவதுதான் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய சந்திப்புகளை நிறைவு செய்த பின்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று (23) பிற்பகல் நாட்டை விட்டு புறப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.