சார்ஜிங் நிலையங்களை நிறுவ சீனாவிடம் அமைச்சர் விஜித முன்மொழிவு
சீனா உள்ளிட்ட உலகளாவிய சந்தையிலிருந்து இலங்கை அதிகளவில் மின்சார வாகனங்களை (EV)
சீனா உள்ளிட்ட உலகளாவிய சந்தையிலிருந்து இலங்கை அதிகளவில் மின்சார வாகனங்களை (EV) இறக்குமதி செய்ய முனைப்பு காட்டி வரும் பின்னணியில், நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை (Charging Points) சீனாவின் ஒரு நன்கொடையாக நிறுவுவது குறித்து அவதானம் செலுத்துமாறு அமைச்சர் விஜித ஹேரத் முன்மொழிந்துள்ளார்.
எதிர்காலத்தில் அதிகளவிலான மின்சார பேருந்துகளை (Electric Buses) இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், இத்தகைய சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மிகவும் அவசியமானதும் முக்கியமானதுமான ஒரு நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று (29) இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹாங்குடன் (Qi Zhenhong) நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் விஜித ஹேரத் இந்த முன்மொழிவை முன்வைத்தார்.
இந்த முன்மொழிவை சாதகமாக ஏற்றுக்கொண்ட சீனத் தூதுவர், இது குறித்து சீன அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தார்.
