புஹாரியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புஹாரியின் கட்சி உறுப்புரிமை, உடனடி அமலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புஹாரியின் கட்சி உறுப்புரிமை, உடனடி அமலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக அவர் வாக்களித்ததே இந்த நடவடிக்கைக்கான காரணமாகும்.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கியிருந்த நிலையில், அந்த உத்தரவுக்கு முரணாக புஹாரி செயல்பட்டதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை கட்சி ஒழுக்கத்தை கடுமையாக மீறும் செயலாகக் கருதுவதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த விடயம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை விளக்கி, ஒரு வாரத்திற்குள் சத்தியப்பிரமாணக் கடிதம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு புஹாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால், முன்னறிவிப்பின்றி மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.