தேசிய நடவடிக்கையின் கீழ் 95 சிவப்பு அறிவிப்புகள்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

Published January 16, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், இது தொடர்பான தகவல்களை வெளியிட்டார். அதன்படி, 2024 ஆம் ஆண்டில் சிவப்பு அறிவித்தல் நடவடிக்கையின் கீழ் 10 சந்தேக நபர்களும், 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேக நபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் மொத்தமாக 21 சந்தேக நபர்களை இலங்கைக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து குற்றச் செயல்களை ஒருங்கிணைத்து முன்னெடுத்து வரும் பல குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனொரு பகுதியாக இன்று ஐக்கிய அரபு இராச்சியம், அபுதாபி சர்வதேச பொலிஸ், டுபாய் பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட தூதரகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பல கொலைச் சம்பவங்களுடனும் நிதி மோசடிகளுடனும் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *