ராஜீவ் காந்தி நினைவு கிரிக்கெட் கிண்ணத்தை வென்ற “ரிச்சஸ் லங்கா” அணி நாடு திரும்பியது
இந்தியாவில் நடைபெற்ற 51ஆவது ராஜீவ் காந்தி நினைவு, 19 வயதுக்குட்பட்டோருக்கான
இந்தியாவில் நடைபெற்ற 51ஆவது ராஜீவ் காந்தி நினைவு, 19 வயதுக்குட்பட்டோருக்கான இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற “ரிச்சஸ் லங்கா” (Riches Lanka) கிரிக்கெட் அணி, அதில் சாம்பியன் பட்டத்தை வென்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியது.
தென்னிந்திய கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டித் தொடரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 14 அணிகள் பங்கேற்றன.
இப்போட்டிகள் கடந்த 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
இதன் இறுதிப்போட்டி தமிழ்நாடு குளோபல் இன்டர்நேஷனல் (Global International – Tamil Nadu) அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைச் சூடிக்கொண்டது.
வெற்றி பெற்ற இலங்கை அணியினர் இன்று அதிகாலை 12.10 மணியளவில் இந்தியாவின் சென்னையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-124 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
