புத்தளம் – பாலவி ரயில் போக்குவரத்து நாளை மீண்டும் ஆரம்பம்

புத்தளம் முதல் பாலவி வரையான ரயில் போக்குவரத்தை நாளை முதல் வழமைக்கு

Published January 18, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

புத்தளம் முதல் பாலவி வரையான ரயில் போக்குவரத்தை நாளை முதல் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 ‘டித்வா’ புயல் காரணமாக நாடு முழுவதும் பல ரயில் வீதிகள் அழிவடைந்திருந்த நிலையில், நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் வீதியும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியிருந்தது.

 குறிப்பாக, சிலாபம் முதல் புத்தளம் வரையான ரயில் வீதியில், பத்துளுஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் பாய்ந்த பெருவெள்ளம் காரணமாக 200 அடிக்கும் அதிகமான ரயில் வீதி முழுமையாகச் சேதமடைந்திருந்தது.

 மஹவெவ பகுதியில் கடுமையாகச் சேதமடைந்திருந்த இடத்தை சீரமைத்ததைத் தொடர்ந்து, கடந்த நாட்களில் சிலாபம் வரை ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த ரயில் பாதையில் சேதமடைந்திருந்த ஏனைய இடங்களைச் சீரமைக்கும் பணிகளை ரயில்வே திணைக்களத்தின் வீதி பராமரிப்புப் பிரிவின் ஊழியர்கள் கட்டம் கட்டமாக முன்னெடுத்திருந்தனர்.

 அதற்கமைய, குறித்த பராமரிப்புப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. எனவே, 53 நாட்களுக்குப் பின்னர் நாளை காலை பாலவி வரை அலுவலக ரயிலை இயக்குவதற்குத் தயாராக உள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *