கலஹா கோயிலுக்கு அருகில் பாரிய மாணிக்கக் கல் – பலத்த பொலிஸ் பாதுகாப்பு
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கலஹா, தெல்தொட்டவத்தை, கல்லந்தென்ன கீழ் பகுதியில்
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கலஹா, தெல்தொட்டவத்தை, கல்லந்தென்ன கீழ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவில் அருகே பல கிலோ எடை கொண்ட, அதிக பெறுமதி வாய்ந்த மாணிக்கக் கல் என சந்தேகிக்கப்படும் பெரிய பாறை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இயற்கை அனர்த்தத்துடன் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, இந்த கோவிலுக்கு அருகில் வந்து சேர்ந்த பல்வேறு நிறங்களைக் கொண்ட இந்தப் பாறையை ஒருவர் கண்டெடுத்துத் தகவல் வழங்கியுள்ளார்.
இந்த மண்சரிவினால் பல வீடுகளுக்கும் கோவிலுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் 2010ஆம் ஆண்டு முதல் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த கோவிலைக் கட்டியெழுப்பியுள்ளனர்.
பல வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு மார்ச் மாதம் கோவிலைத் திறக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், மண்சரிவினால் கோவில் சேதமடைந்ததால் மக்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.
அந்த வேளையிலேயே இந்த வண்ணமயமான பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த இடத்திற்கு கலஹா பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மற்றும் மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை ஆகியவற்றின் மூலம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.