‘திட்வா’ சூறாவளி : நஷ்டஈடு வழங்கும் பணிகள் 70% நிறைவு
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும், அவர்களின்
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் வழங்கி வரும் நஷ்டஈட்டுத் தொகை, முறையான முகாமைத்துவத்துடன் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சமையலறை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி தற்போது 70% நிறைவடைந்துள்ளது. 25 மாவட்டங்களில் தகுதியுள்ள 156,805 குடும்பங்களில், 109,512 குடும்பங்களுக்கு ஏற்கனவே இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
முழுமையாக (100% ) வழங்கப்பட்ட மாவட்டங்கள்: நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை.
ஏனைய மாவட்டங்களின் முன்னேற்றம்: மன்னார் (98% ), முல்லைத்தீவு (99% ), குருநாகல் (91% ), அனுராதபுரம் (91% ), மாத்தளை (91% ).
மேலும், வீடுகளைத் துப்புரவு செய்வதற்காக வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் 97% ஆகும். தகுதியுள்ள 435,104 குடும்பங்களில் 422,900 குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 15,000 ரூபா கொடுப்பனவு இதுவரை 136,994 (73% ) மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படவுள்ள 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
பாதிப்புக்குள்ளான பதிவு செய்யப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு, ஒருமுறை மட்டும் வழங்கப்படும் 200,000 ரூபா கொடுப்பனவிற்காக சுமார் 1,006 மில்லியன் ரூபா நிதி மாவட்ட செயலகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா 50 இலட்சம் ரூபா செலவில் புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் ‘Pசுழுதுநுஊவு 5ஆ’ திட்டம் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்ததாக:
வடக்கு – கிழக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான 2,500 வீடுகள் உட்பட, நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை அமைக்கும் ‘சொந்த இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வீடுகள் அமைப்பதற்கு பொருத்தமற்றவை என அடையாளம் காணப்பட்ட இடங்களுக்குப் பதிலாக, புதிய நிலங்களை அடையாளம் காணும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.
பயிர்ச் சேதங்களுக்கான நஷ்டஈடுகளை வழங்கும் பணிகள் தற்போது வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுவதுடன், அழிவடைந்த கால்நடைப் பண்ணைகள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவற்றுக்கான நஷ்டஈட்டுத் தொகையைக் கணிப்பிடும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
பாதிப்புக்குள்ளான மக்கள் முன்னரை விட சிறந்த வாழ்க்கைத்தரத்தை அடையும் வகையில் இந்த மறுவாழ்வுப் பணிகள் அமைய வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இலங்கை வரலாற்றில் பேரிடர் ஒன்றின் போது வழங்கப்படும் அதிகூடிய நஷ்டஈட்டுத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.