போலி விசாவைப் பயன்படுத்திய பங்களாதேஷ் நாட்டவர் கைது
போலி ஸ்பெயின் விசாவைப் பயன்படுத்தி அந்நாட்டிற்குத் தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ்
போலி ஸ்பெயின் விசாவைப் பயன்படுத்தி அந்நாட்டிற்குத் தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டவர் ஒருவர், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய பங்களாதேஷ் இளைஞர் ஆவார்.
இலங்கைக்கு வருகை தந்திருந்த இவர், இன்று முற்பகல் 10.15 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-665 என்ற விமானம் மூலம் டோஹா நோக்கிப் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
விமான நிலைய அனுமதியின் போது அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகள், அவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது, அவர் வைத்திருந்த ஸ்பெயின் விசா போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளுக்கு விசா வழங்கும் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனம் ஒன்றிற்கு 25,000 பங்களாதேஷ் டாக்கா (சுமார் 63,000 இலங்கை ரூபாய்) பணம் செலுத்தி இந்த விசாவைப் பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த போலி விசாவைப் பயன்படுத்தி டோஹா ஊடாக ஸ்பெயினுக்குத் தப்பிச் செல்லவே இவர் திட்டமிட்டிருந்தார். இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவரை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.