2025இல் 17.2 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்!
இலங்கை சுங்கத்தின் தற்காலிகத் தரவுகள் மற்றும் ஏற்றுமதி புள்ளிவிவரங்களின்
இலங்கை சுங்கத்தின் தற்காலிகத் தரவுகள் மற்றும் ஏற்றுமதி புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மணிக்ககற்கள் மற்றும் ஆபரணங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 17,252.15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதித் துறையானது அதன் வளர்ச்சி வேகத்தை வலுவாகத் தக்கவைத்துக் கொண்டதுடன், 5.6% வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பட்டு வரும் வெளிநாட்டு வர்த்தகச் சூழலைக் காட்டுகிறது.
2025 டிசம்பர் மாதத்தில் மட்டும் பொருட்கள் மற்றும் சேவைகள் துறையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,490.49 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.95% வளர்ச்சியாகும். இந்தச் சாதனை இலங்கையின் ஏற்றுமதித் துறையின் பலத்தையும், உலகளாவிய ரீதியில் சந்தைப் போட்டியை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட மூலோபாயங்களின் வெற்றியையும் எடுத்துக் காட்டுகிறது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க, 2025 ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 17,252.15 மில்லியன் டொலர் வருமானமானது, நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி இலக்கில் 94.79% க்கும் அதிகமானது எனத் தெரிவித்தார்.
பிரதான சந்தைகள் வழமைக்குத் திரும்பியமை, நிலையான உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி உத்திகளைச் சரியாக நடைமுறைப்படுத்தியமை போன்ற காரணிகளே இந்த வெற்றிக்குக் காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.