சிறீதரனின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி?

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் ஆலோசனையினை....

Published January 26, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் ஆலோசனையினை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் அவரின் பாராளுமன்ற குழு தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்இ பாராளுமன்ற குழு தலைவர் பதவியானது தமிழரசுக்கட்சியின் அரசியல்குழவினாலேயே வழங்கப்பட்டது.

தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் அரசியல்குழுவின் கூட்டத்தில் அந்தநேரத்தில் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டவர்.அந்த நேரத்தில் தேசிய பட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கும் அந்த அரசியல்குழு கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று பாராளுமன்றத்தில் கொறடா பதவியை டாக்டர் சத்தியலிங்கத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற நடவடிக்கைகுழுவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நாங்கள் நியமித்தோம்.

நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல்குழுவினால் நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான அதிகாரம் அரசியல்குழுவுக்கே இருக்கின்றது.எந்த குழு நியமித்ததோ அதனை மாற்றுவதற்கு அதிகாரம் அந்த குழுவுக்கு உண்டு.

தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் ஆலோசனையினை அவர் ஏற்றுக்கொள்ளமறுத்ததன் காரணத்தினால் அரசியல்குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தினை மீளப்பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.

அரசியல்குழு அவர்மீது நம்பிக்கைவைத்து ஏகமனதாக பாராளுமன்ற குழத்தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது.அரசியல்குழு இரண்டு தடவைகள் அவர் பாராளுமன்ற அரசியல்பேரவையிலிருந்து இராஜினாமா செய்யவேண்டும் என்ற ஆலோசனையினை வழங்கியிருந்தது.

நேற்றை தினம் சுமார் 04மணிநேரங்கள் அதே கருத்தினை அவரிடம் வலியுறுத்தியிருந்தோம்.ஆகவே கட்சியின் எந்த உயர்குழு அவருக்கு அந்த பதவியினை வழங்கியதோ அந்த குழுவின் ஆலோசனையினையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லையென்றால் அந்த பதவியை அவரிடமிருந்து எடுப்பது என தீர்த்தோம்.

இதேநேரம் இது தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கேட்டபோது அவ்வாறான எந்த இறுதி முடிவும் இதுவரையில் எடுக்கவில்லையென தெரிவித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *