கொங்கோவில் பயங்கரவாத தாக்குதல் : 25 பேர் பலி
கொங்கோ நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு கும்பல் ....
கொங்கோ நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு கும்பல் பொதுமக்களை நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏடிஎப் என்கிற கூட்டணி ஜனநாயகப் படை (Allied Democratic Force – ADF) நடத்திய இத்தாக்குதலில் ஒரே வீட்டில் இருந்த 15 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இடுரி மாகாணத்தின் இருமு (Irumu) பிரதேசத்தில் உள்ள அபாகுலு கிராமத்தில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், வேலஸ் வோன்குட்டு (Walese Vonkutu) நிர்வாகப் பகுதியில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உகாண்டாவுக்கும் கொங்கோவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஏடிஎப் ஆயுதக் குழு இதற்கு முன் பொதுமக்களை நோக்கி தாக்குதல் நடத்தி பலரை சுட்டுக் கொன்றுள்ளது.
உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசேவேனியின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் இருந்து இந்தக் குழு வளர்ந்தது. ஆனால், உகாண்டாவின் இராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு இவர்கள் கொங்கோ நாட்டுக்குள் சென்று பதுங்கிக்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த ஆயுதக் கும்பல் 100க்கும் மேற்பட்டவர்களை கொன்று தொடர் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் தற்போது இக்கொடூர தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.
இதனையடுத்து, உகாண்டா மற்றும் கொங்கோ ஆகிய இரு நாடுகளின் இராணுவத்தினரும் இந்த கும்பலுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.