கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்
கம்பளை மற்றும் உடபளாத பிரதேச சபைகளினால் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை,
கம்பளை மற்றும் உடபளாத பிரதேச சபைகளினால் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை, புசல்லாவை – சாங்குவார் (Sanctuary) தோட்டத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (30) கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத்தின் மேல் பகுதியில் கழிவுகளைக் கொட்டுவதால் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலைப்பகுதியில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு டன் கணக்கில் கழிவுகளைக் கொட்டுவது பாரிய மண்சரிவை ஏற்படுத்தி உயிர் மற்றும் சொத்து சேதங்களை உண்டாக்கலாம் என அச்சப்படுகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் பிரதான வீதிக்கு அருகில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிகள் மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
எனினும், நேற்று (29) அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்து, அங்கு கழிவுகள் கொட்டப்படும் என உறுதியாகத் தெரிவித்தமையைத் தொடர்ந்தே மக்கள் இந்த வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.