சாந்த பத்மகுமாரவுக்கு எதிராக அஜித் ராஜபக்ஷ பொலிஸில் முறைப்பாடு
முன்னாள் பிரதிச் சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார். சமீபத்தில்
முன்னாள் பிரதிச் சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைப் பயன்படுத்தி, அஜித் ராஜபக்ஷ மோசடியான முறையில் நிவாரணக் காசோலைகளைப் பெற்றுள்ளதாகச் சாந்த பத்மகுமார கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அஜித் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்:
“எனது பெயர் மற்றும் நான் வகித்த கௌரவமான பதவிகளைப் பயன்படுத்தி, எனக்குப் பாரிய அவதூறு ஏற்படும் வகையில் சாந்த பத்மகுமார இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணக் காசோலையை நான் பெற்றுக்கொண்டதாக அவர் கூறுகிறார். சாந்த பத்மகுமாரவின் நடத்தை பற்றி நாடு முழுவதும் அறியும்.
நான் தற்போது எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் வசித்து வருகிறேன். எனக்குத் தெரிந்தவரை டித்வா புயலினால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை, அப்படி ஒரு தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. எனக்கு ஒரு சதமேனும் நட்டம் ஏற்படவில்லை எனும் போது, நான் யாரிடம் போய் நிவாரணம் கோருவேன்? இந்த அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டினால் எனக்கு ஏற்பட்ட அவதூறுக்கு எதிராக நான் நிச்சயமாகச் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.”