தரமான மனித வளத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு

எமது நாடு பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாப்பானதாக .....

Published January 31, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

எமது நாடு பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால், தரமான மனித வளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதற்குத் தேவையான மிக முக்கியமான காரணி கல்வி எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

கல்வித்துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், அந்தப் பயணத்தில் எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும், தெளிவான இலக்கும் நோக்கமும் இருப்பதால் அனைத்தையும் வெற்றிகொண்டு முன்னோக்கிச் செல்வோம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். 

2023/2024 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட கல்வி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக, இன்று (31) அலரி மாளிகையில் நடைபெற்ற “EDCS சிசு நெண பிரணாம” புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்: 

1930ஆம் ஆண்டு வெறும் 58 உறுப்பினர்களுடனும், ஒரு ரூபாய் அங்கத்துவக் கட்டணத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சேவைப் பணியாளர்களின் கூட்டுறவுச் சேமிப்பு மற்றும் கடன் சங்கம் (EDCS), இன்று சுமார் 2,15,000 உறுப்பினர்களைக் கொண்டு தெற்காசியாவின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கமாக வளர்ந்திருப்பது ஒரு விசேட வெற்றியாகும். 

பாடசாலைக் கல்வியிலிருந்தே இன்றைய உலகிற்கு ஏற்ற வகையில் கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் மாணவர்கள் இந்த மாற்றத்தின் முன்னோடிகளாக மாற வேண்டும். 

ஆண்டுதோறும் ஆரம்பக் கல்வியில் இணையும் சுமார் மூன்று இலட்சம் மாணவர்களில், 40,000 பேர் மட்டுமே பல்கலைக்கழக வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த அரிய வாய்ப்பை நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துமாறு மாணவர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். 

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தொழிலாளர் துறை பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உரையாற்றுகையில், “ஊழலற்ற நிர்வாகத்தின் காரணமாக, கடந்த 9 மாத காலப்பகுதியில் சங்கத்தின் நிதி ஸ்திரத்தன்மை 1,200 மில்லியன் ரூபாயிலிருந்து 1,700 மில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளது” எனக் குறிப்பிட்டார். 

இம்முறை திட்டத்தின் கீழ், அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 2,292 மாணவர்களுக்காக 13.7 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி புலமைப்பரிசிலாக வழங்கப்பட்டது. ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 75,000 ரூபா வரை புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் லால் குமார், மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தர்ஷனி இத்தமல்கொட உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *