புனித சின்னங்களை வழிபட்ட ஜனாதிபதி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் மூலம் இந்திய அரசாங்கத்தின் முழு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் மூலம் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட “புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசன நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.
78ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த பெருமைமிக்க சந்தர்ப்பத்தில், கொழும்பு, கங்காராம விகாரையில் தெவ்னி மோரி புனிதச் சின்னங்களை வழிபடக் கிடைத்தமை நமது இரு நாடுகளுக்கும் இடையிலான தனித்துவமான நட்பின் சிறப்பு நிகழ்வாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் பௌத்த மக்கள் வழிபடுவதற்காக தான் பிறந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் புனிதசின்னங்களை வழங்கியமை, நமது நாட்டின் மீது அவர் கொண்டுள்ள மரியாதை மற்றும் கௌரவத்திற்கான அடையாளம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய இந்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும், நான் உட்பட இலங்கை மக்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புனிதச்சின்ன தரிசனத்தை ஒருங்கிணைத்து, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட அனைத்து இராஜதந்திர பிரதிநிதிகளுக்கும், இந்த புனிதச் சின்ன தரிசனத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் தேசிய மற்றும் மதப் பணிகளில் ஈடுபட்டுள்ள கொழும்பு, கங்காராம விஹாரையின் விகாராதிபதி வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் விஹாரையின் நிர்வாக சபைக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
