நாட்டின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி ஆளுநரின் வௌிப்படுத்தல்
டித்வா சூறாவளியின் தாக்கத்திற்கு மத்தியிலும், இலங்கையின் ......
டித்வா சூறாவளியின் தாக்கத்திற்கு மத்தியிலும், இலங்கையின் பொருளாதாரம் சிறந்த நிதி ஒழுக்கத்துடன் பேணப்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற “செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் யுகத்தில் பொருளாதார வளர்ச்சி” என்ற தலைப்பிலான மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலதிக செலவுகள், அரசாங்கத்தின் கடன் வாங்கல் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவதாக விவாதங்கள் நிலவிய போதிலும், கடந்த சில வருடங்களில் காணப்பட்ட சிறந்த வருமான ஈட்டல் மற்றும் நிதி ஒழுக்கம் காரணமாக இரண்டு அரச வங்கிகளிலும் ஒரு டிரில்லியன் ரூபாய் மேலதிக இருப்பை (Surplus) பேண முடிந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் அரச வங்கிகளில் ஒரு டிரில்லியன் ரூபாய் பற்றாக்குறை காணப்பட்ட போதிலும், தற்போது அது மேலதிக இருப்பாக மாறியுள்ளதுடன், இவ்வாறான பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ளும் போது அந்த நிதி பயனுள்ளதாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.
அத்துடன் இந்தச் சேமிப்புகள் காரணமாக அரசாங்கம் மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என்றும், இவ்வருடத்திற்குள் 8 பில்லியன் அமெரிக்க டொலர் பாதுகாப்பு கையிருப்பைக் கட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.
பணவீக்கம் தற்போது 2% இற்கு அண்மித்த மட்டத்தில் காணப்படுவதுடன், பணவீக்கத்தை 5% மட்டத்தைத் தாண்ட விடாமல் பேணுவதே தமது இலக்கு என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.