‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது
தாய்லாந்தில் இருந்து சுமார் 2 கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான "குஷ்"
தாய்லாந்தில் இருந்து சுமார் 2 கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான “குஷ்” (Kush) போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வர முயன்ற ஒருவரும், அதனைப் பொறுப்பேற்க வந்த இருவருமாக மொத்தம் மூன்று பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய வர்த்தகர் ஒருவர். இவர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் ஒருவராவார்.
இவர் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் (Thai Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் அதிகாலை 12.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியின் (Suitcase) பொய் அடித்தளத்தில் இரண்டு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 கிலோ 116 கிராம் “குஷ்” போதைப்பொருள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் (PNB) கண்டுபிடிக்கப்பட்டது.
பிரதான சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், இந்தப் போதைப்பொருளை மன்னார் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக நீர்கொழும்பு நகரின் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் இருவர் காத்திருப்பது தெரியவந்தது. அதற்கமைய, மன்னாரைச் சேர்ந்த 43 வயதுடைய மெக்கானிக் ஒருவரும் 36 வயதுடைய சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.