குடியுரிமைக்கான போராட்டத்தை மலையகம் அடுத்தவரிடம் கொடுத்துவிடக் கூடாது

இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏந்துவதும் கறுப்புக் கொடி ஏந்துவதும் நுணுக்கமான அரசியல் பார்வை கொண்டது.அறுபது ஆண்டுகாலமாக மலையக முன்னவர்கள்

Published February 7, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏந்துவதும் கறுப்புக் கொடி ஏந்துவதும் நுணுக்கமான அரசியல் பார்வை கொண்டது.அறுபது ஆண்டுகாலமாக மலையக முன்னவர்கள் போராடி வென்ற ‘இலங்கையர்’ எனும் தகுதியை, ஆத்திர அவசரப்பட்டு சுதந்திர தினத்தில் ‘கறுப்புக் கோடி’ ஏந்தி கைவிட்டு விடுவது மலையகத் தமிழர் நிலைப்பாடாக இருந்து விடமுடியாது. தோழமைகளாக இருந்தாலும் அர்த்தமுள்ள குடியுரிமைப் போராட்டத்தை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்கக் கூடாது என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்

“நாங்களும் இலங்கையர்களே” என்ற கோஷத்தை முன்வைத்து மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்த சுதந்திர தின எண்ணக்கருவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுதந்திர தினத்தில் அரங்கம் முனவைத்த “தாங்கும் இலங்கையர்களே” எனும் எண்ணக்கரு இலங்கை அரசுக்கோ, இறைமைக்கோ எதிரானதல்ல. ஆள் போதும் கூட இதனை முன்னெடுப்பதற்கு பல சவால்கள், தடைகள் இருந்தன. சில இடங்களில் தடங்கல்களும் சில இடங்களில் தடைகளும் வந்தபோதும் பல இடங்களில் எமது அரங்கத்தினர் தடைகள் மீறி வெற்றிகரமாக நடாத்தியிருந்தனர். களத்திலும் சமூக வலைத்தளத்திலும் இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் அரங்கம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

அத்தகைய தடை, அல்லது தடங்கல்கள் வருவதற்கு பிரதான காரணம் இலங்கையில் தமிழ் மக்களில் ஒரு வகுதியினர் சுதந்திர தினத்தில் ‘கறுப்புக் கொடி’ ஏந்தப் போவதாக வந்த செய்திகளோடு தொடர்புடையதாகும்.

இங்கேதான்,இலங்கைத் தமிழர் – மலையகத் தமிழர் எனும் இரு தமிழ் தரப்பினரிடையேயும் நிலவும் நுண்ணிய அரசியல் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

“இலங்கையில் இருந்து பிரிந்து போகிறோம்” எனும் நிலைப்பாட்டில் இலங்கைத் தமிழர் தரப்பு போராட்டம் நடாத்திய அதே இலங்கையில் தான்,

“இலங்கையில் எங்களுக்கு பிரஜா உரிமைக் கொடு. நாங்களும் இலங்கையர்களே” எனும் போராட்டத்தை மலையகத் தமிழர்கள் நடாத்தினார்.

இலங்கையில் இருந்து பிரிந்து செல்லும் நிலைப்பாட்டை கைவிட்டு ‘சமஷ்ட்டி அல்லது மாகாணசபை’ முறைமைகள் ஊடாக ‘ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு’ என இலங்கைத் தமிழர் தரப்பு திரும்பிய நாட்களில் (2009 க்குப் பின்) சம்பந்தர் ஐயா கையில் இலங்கைத் தேசிய கொடி ஏந்தப்பட்டது அல்லது திணிக்கப்பட்டது. அந்தப் படம் இந்த 78வது சுதந்திர தினத்திலும் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *