2026 டி-20 உலகக் கிண்ணம் – அயர்லாந்துடன் மோதுகிறது இலங்கை!
இலங்கை மற்றும் இந்தியாவின் இணை அனுசரணையில் நடைபெறும் 2026 ஐசிசி இருபதுக்கு 20
இலங்கை மற்றும் இந்தியாவின் இணை அனுசரணையில் நடைபெறும் 2026 ஐசிசி இருபதுக்கு 20 (டி-20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி எதிர்கொள்ளும் முதலாவது போட்டி அயர்லாந்துக்கு எதிராக இன்று (08) ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் வேகமான மற்றும் விறுவிறுப்பான ஆட்டமுறையாகக் கருதப்படும் 20-20 வடிவிலான உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது பதிப்பு இதுவாகும்.
இந்தத் தொடரின் பெரும்பாலான போட்டிகள் இந்தியாவின் சென்னை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகள் கொழும்பு மற்றும் பல்லேகலை ஆகிய இடங்களிலுள்ள 3 மைதானங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இறுதிப் போட்டி உட்பட இத்தொடர் மொத்தம் 55 போட்டிகளைக் கொண்டதுடன், அவற்றில் 20 போட்டிகளை இலங்கையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், பாகிஸ்தான் அணி அரை இறுதி அல்லது இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், இலங்கையில் நடைபெறும் போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கும்.
20 அணிகள் பங்கேற்கும் இம்முறை தொடரில், இலங்கை அணி ‘B’ பிரிவில் போட்டியிடுகிறது. இப்பிரிவில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.