இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறைக்கு சர்வதேச ஆதரவு: ICAO பிராந்திய பணிப்பாளர் உறுதி
இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையை பாதுகாப்பான, திறமையான மற்றும்
இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையை பாதுகாப்பான, திறமையான மற்றும் நிலையான ஒன்றாகத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான சர்வதேச ஆதரவை வழங்கத் தான் தயாராக இருப்பதாக சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டாவோ மா (Tao Ma) தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் இன்று உள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு தசாப்தங்களில் உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறை மூன்று மடங்காக வளர்ச்சியடையவுள்ளது.
இதற்குத் தேவையான மனித வளத்தைத் திரட்டுவது பெரும் சவாலாக அமையும்.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை சர்வதேச தரத்திற்கு ஏற்பச் செயல்படுவதைப் பாராட்டிய அவர், இந்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச கணக்காய்வை (International Audit) வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கவும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வின் போது பின்வரும் இலங்கை அதிகாரிகள் சர்வதேச ரீதியாகக் கௌரவிக்கப்பட்டனர்:
ரெஹான் வன்னியப்பா: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் உலகளாவிய வெற்றியாளராக (ICAO Global Champion) நியமிக்கப்பட்டார். பிரபாத் குலரத்ன மற்றும் கலாநிதி உபுலி சசித்ரா: சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தூதுவர்களாக (ICAO Global Ambassadors) நியமிக்கப்பட்டனர்.
1948ஆம் ஆண்டிலிருந்து இலங்கை ICAO அமைப்பின் அங்கத்துவ நாடாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறைக்கு பங்களிப்பு செய்த ஓய்வுபெற்ற அதிகாரிகளும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.


