கொழும்பில் அதிர்ச்சி: உணவக சாப்பாட்டில் பாம்புக்குட்டி
கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவில் ......
கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பு குட்டி ஒன்று இருந்ததாக கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை குறித்த உணவகத்தில் உணவு உட்கொண்ட போது, உணவில் பாம்பு குட்டி போன்ற ஒரு தலைப் பகுதி காணப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை உணவக நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எமது தரப்பிலிருந்து இவ்வாறான ஒரு தவறு நடக்க வாய்ப்பே இல்லை என உணவக முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், “சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானவுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உணவகத்திற்கு வந்து சோதனைகளை மேற்கொண்டனர்.
குறித்த வீடியோவை வெளியிட்டவர் ஒரு சமூக வலைத்தள பிரபலம் எனவும் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக திட்டமிட்டு இவ்வாறான செயலைச் செய்திருக்கலாம்” என வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் வீடியோவின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி கே. ஸ்ரீபிரதாபன் தெரிவித்துள்ளார்.
உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.