வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை ஜேர்மன் பயணம்
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நாளை (26) ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அமைச்சர் நாளை மற்றும் நாளை மறுதினம் (27) ஆகிய இரு தினங்கள் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.
ஜேர்மனியின் ஆசிய-பசுபிக் வர்த்தகச் சங்கத்தின் (OAV) பிரேமன் கிளையினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப, வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தொடர்ச்சியான சந்திப்புகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார் என்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய-பசுபிக் வர்த்தகச் சங்கத்தின் (OAV) பிரேமன் கிளையின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில், ஆசியாவின் கௌரவ அதிதியாகவும் முக்கிய பேச்சாளராகவும் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார். ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜோஹன் வேட்ஃபுல் (Dr Johann Wadephul), ஜேர்மனியின் கௌரவ அதிதியாகவும் முக்கிய பேச்சாளராகவும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.
ஜேர்மனிக்கும் ஆசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான ஜேர்மனியின் மிகப்பெரிய சங்கம் OAV ஆகும். இது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் கவனம் செலுத்தும் ஜேர்மன் வணிகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைக்கும் முதன்மையான தளமாகும்.
இந்த விஜயத்தின் போது, அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜோஹன் வேட்ஃபுல் அவர்களைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், இலங்கை தொடர்பான வணிக வட்டமேசை மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.