அக்குரேகொட இரட்டை கொலை விசாரணையில் முன்னேற்றம்

கடுவலை, அக்குரெகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியின் வாகன

Published February 25, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

கடுவலை, அக்குரெகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியின் வாகன தரிப்பிடத்தில், காரில் இருந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.

இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இது ஒரு குறிப்பிட்ட கும்பலினால் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு குற்றமாகும். ஆரம்பத்தில் பொலிஸாரிடம் மிகக் குறைந்த தகவல்களே இருந்தன.

இனந்தெரியாத நபர்கள் ஒரு காரில் வந்து சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர் என்ற தகவலைத் தவிர வேறு ஆதாரங்கள் இருக்கவில்லை. எனினும், புலனாய்வுப் பிரிவினர் சிறிய தகவல்களைக் கூடப் பெரிய ஆதாரங்களாக மாற்றி விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்தக் கொலைச் சம்பவத்திற்காக நான்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த நான்கு வாகனங்களையும் பொலிஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.

அவற்றில் ஒரு வாகனம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. குறித்த வாகனத்தைச் செலுத்திய சாரதியைத் தவிர, ஏனைய அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (24) மொனராகலை பகுதியில் வைத்து ஒரு துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார். இதன் மூலம் இக்கொலையுடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகளும் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர்.

ஒரு சந்தேகநபரை அடையாளம் காணப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டது. அதற்கமைய பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே மொனராகலையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் இன்று மொனராகலையிலிருந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும், இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த மேலும் தெரிவித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *