முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை மார்ச் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கின் முதலாவது சாட்சிக்கு மார்ச் 24ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார்.
2014ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் கலந்துகொண்ட தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering) நிறுவனம் தனக்குச் சொந்தமான 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயை விடுவித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி ‘ஊழல்’ செய்ததாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.