பின்லாந்துடன் இலங்கை விசேட ஒப்பந்தம்!
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் பின்லாந்தில் வைத்து கையெழுத்தானது.
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1954ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. அந்த இருதரப்பு உறவுகள் மற்றும் நீண்டகால நட்புறவைப் பிரதிபலிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைக் பேச்சுவார்த்தைகள் பின்லாந்தின் ஹெல்சின்கியில் நடைபெற்றன.
இதன்போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், அரசியல் கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான முறையான நடைமுறை ஒன்று உருவாக்கப்படும். அத்துடன், இருதரப்பு விவகாரங்களின் தொடர்ச்சி மற்றும் மூலோபாய திசை என்பனவும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேலும் விரிவுபடுத்துவதுடன், சுபீட்சமான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
சந்தை தேவைகளை அடிப்படையாகக் கொண்ட திறன் மேம்பாடு, வானிலை தரவுகளைப் பகிர்தல், தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான ஒத்துழைப்பு மற்றும் கடற்படை பயிற்சி நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
பின்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களின் நலன்புரி விவகாரங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். பின்லாந்து வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.