ஜனாதிபதி தலைமையில் ‘ஹிமிகம’ (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பல்வேறு

Published February 28, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 17 min read

கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பல்வேறு நாடுகள் அவற்றின் எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கொவிட் தொற்றுநோய் காரணமாக உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டதுடன், ஒரு நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்புக்கும், அதன் மக்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானது என்றும், அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக உணவுப் பாதுகாப்பிற்கான திட்டங்களைத் தயாரிக்கும் அதே வேளை, முறையான ஆய்வுக்குப் பிறகு புதிய பொருளாதார உத்திகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவு காணிகளை விடுவிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசிய திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

1935 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளை அபிவிருத்தி செய்து அனுபவிக்கும் விவசாய சமூகம் உட்பட பொதுமக்கள், தமது காணிகளின் முழுமையான உரிமை இல்லாததால், சம்பந்தப்பட்ட காணியை மனிதத் தேவைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகளுக்குப் பயன்படுத்துவதிலும், அந்த காணியை பொருளாதார அலகாக அபிவிருத்தி செய்வதிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தன.

அதன்படி, காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் நிபந்தனைகள் நீக்கப்பட்டு, அந்த கொடுப்பனவுப் பத்திரங்களுக்கு 1947 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2 இன் படி பூரண அளிப்புப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசாங்கத்திடம் தானாக முன்வந்து ஒப்படைக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களுக்கு ‘ஹிமிகம’ (உரித்து) பூரண அளிப்புப் பத்திரங்கள் வழங்கப்படுவதுடன், இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

இன்று (27) அநுராதபுர மாவட்டத்தில் 500 ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதுடன், 50 பயனாளிகளுக்கு ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரங்களை ஜனாதிபதி அடையாள ரீதியில் வழங்கினார்.

மக்கள் புதிய உலகத்திற்குள் நுழையும்போது, ​​அவர்களின் காணிகளை கடுமையான சட்டங்களால் பிணைக்க வேண்டிய அவசியமில்லை என்று தனது அரசாங்கம் நம்புவதாகவும், எனவே, மக்கள் சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக பூரண அளிப்புப் பத்திரங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த காணிகளைப் பாதுகாத்து, தமக்குப் பிறகு தமது பிள்ளைகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்நிகழ்வில் மேலும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட “உறுமய” காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் திட்டத்தில் இருந்த சிக்கல்களைத் தீர்த்து, முறையான திட்டத்தின் கீழ் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எச்.எம். சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

மேலும், நாட்டில் காணி துஷ்பிரயோக கலாச்சாரத்தை தற்போதைய அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் பேசுகையில், அரசியல் நோக்கங்கள் இல்லாமல் மக்களுக்கு காணி உரிமையை வழங்க முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:

எமது நாட்டுக் கலாசாரம் மற்றும் பிணைப்புடன் பார்க்கையில் காணி என்பது சொத்து மாத்திரமல்ல. அது உறவு முறையாகும். எமது கலாசாரம் காணியுடன் பிணைந்துள்ளது. எமது நாட்டுப் பொருளாதாரம் விவசாயத்துடன் தொடர்புபட்டு இருப்பதால் காணி என்பது மிகவும் முக்கியமானது. தமக்கென ஒரு காணி இருப்பது தொடர்பில் அனைவருக்கும் கனவு உள்ளது.

காணி முகாமைத்துவத்தை தற்பொழுதாவது மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறு மோதல்கள், சிக்கல்கள் எழும். பொருளாதாரம் முழுமையாக நெருக்கடிக்குள்ளாகும் நிலை ஏற்படலாம். எதிர்காலத்தில் தனித்தனியான வீடுகள் நிர்மாணிப்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. முழுமையான காணியும் வீட்டிற்காக பயன்படுத்தப்பட்டால் பொருளாதார மூலோபாயத்திற்கு காணிகள் எஞ்சாது.

காணிகள் தொடர்பில் விஞ்ஞான ரீதியாகவும் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலும் பொருளாதார தேவைகளின் அடிப்படையில் திட்டமிட்டு புதிய காணிப் பயன்பாட்டுக் கொள்கையொன்று உருவாக்குவது அவசியம். வரவு செலவுத் திட்டத்தில் காணி வங்கியொன்றை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காணிகளுடன் பிணைந்த உறவு எமது பொருளாதாரத்தில் முக்கிய பங்குதாரராகும். பெருமளவான காணித்தகராறுகள் காணப்படுகின்றன.

காணிச் சட்டங்களில் சில சிக்கல்கள் உள்ளன. மக்களுக்கு காணிகளை வழங்குகையில் சில நிபந்தனைகளை விதிப்பதில் தவறில்லை. அதனால் தான் இன்றும் கிராமங்களில் உள்ள காணிகள் சிக்கலான காணிச் சட்டங்களின் காரணமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.

சிக்கலான காணி உரித்துக்குப் பதிலாக பூரண அளிப்பு பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல்வேறு வகையான பெயர்களில் காணி உறுதிகள் கடந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் கைகளில் காணி இருக்க வேண்டும் என்பதற்காகவே கடுமையான காணிச் சட்டங்கள் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன.

தொடர்ந்தும் கடுமையான சட்டங்களில் ஊடாக மக்களின் காணி உரிமைகளை கட்டிப்போட வேண்டிய தேவை கிடையாது. அதனால் பூரண அளிப்புப் பத்திரம் வழங்க எமது அரசு முடிவு செய்துள்ளது. விற்கவோ வேறு நபருக்கு வழங்கவோ முடியாததால் முன்பு எமது காணிகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால் நாம் பூரண அளிப்புப் பத்திரம் வழங்கிய பின்னர் இவற்றை மேற்கொள்ள முடியும். பொருளாதார நெருக்கடிகளின் போது அனைத்து தீர்வுகளும் கைகொடுக்காமல் போகும்போது கடைசியாக காணி விற்பனை தொடர்பில் கவனம் செலுத்துவார்கள்.

பூரண அளிப்புப் பத்திரம் ஊடாக உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் காணியை விற்க வேண்டாம். அதனை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அந்த மக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தந்த சமயங்களில் காணப்படும் பொருளாதார மூலோபாயங்களுக்கு அமையவே காணிப் பயன்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. உணவுப் பாதுகாப்பிற்காக விவசாயத்திற்கு காணிகளை பயன்படுத்த வேண்டும். பொருளாதாரத்தில் முக்கிய பங்காக உணவு பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு திட்டங்களைத் தயாரித்து வருகிறோம்.

முறையான ஆய்வின் பின் எமது காணிகளின் ஒரு பகுதியை புதிய பொருளாதார மூலோபாயங்களுக்கு அமைவாக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளோம்.

அந்தந்த சமயங்களில் ஏற்படும் தொழில்நுட்பத்தை உள்வாங்குவதன் ஊடாகவே பல நாடுகள் அபிவிருத்தியில் வெற்றிகளை கண்டன. கைத்தொழில் ,அறிவியல் முன்னேற்றங்களுக்கு அமைவாக செயற்பட்டால் உலகில் காணப்படும் செல்வந்தர், ஏழை என்ற பாகுபாடு குறையும். 20 ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை எட்டிய போது அதற்கு அமைவாக பொருளாதாரத்தை மாற்றியமைக்க நாம் தவறினோம்.

புதிய பொருளாதார மூலோபாயங்களுக்கு அமைவாக குறிப்பிடத்தக்க அளவு காணிகளை பயன்படுத்த இருக்கிறோம். உலக தொழில்நுட்ப அறிவியலுடன் இணைந்த கைத்தொழில்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

முன்னர் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பெருமளவு காணிகள் கைப்பற்றப்படும் நிலை காணப்பட்டது. வழக்கு தொடர்பான சிக்கல்கள் இன்றி காணி உறுதிகள் முறையாக வழங்கப்பட வேண்டும்.

பொருளாதார வீழ்ச்சியில் அனைவரும் பாதிக்கப்பட்டனர். மாணவர்கள், வர்த்தகர்கள் என அனைத்துத் துறையினரும் பாதிக்கபட்டனர். சிறந்த பொருளாதாரத்துடன் கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே மக்கள் எம்மை ஆட்சியில் அமர்த்தினார்கள். தற்போது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டுள்ளது. 2025 வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையை 2.4 சதவீதமாக குறைக்க முடிந்தது. வட்டி வீதத்தை ஒற்றை இலக்கத்தில் பேண முடிந்துள்ளது. 2022 இல் அது 36 சதவீதம் வரை உயர்ந்தது. பண வீக்கத்தை 5 சதவீதத்தை விட குறைவாக பேண வேண்டும். நாம் அதனை 2.7 சதவீதமாக பேணி வருகிறோம். அரசின் வருமானத்தை 1996 இன் பின்னர் அதிகரிக்க முடிந்துள்ளது.

தற்போது பொருளாதார பயணம் சுமூகமாக அமைந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வது தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் தொடர்பில் அவநம்பிக்கை இருக்கும் நாட்டில் எந்த முதலீட்டாளரும் முதலிட முன்வருவதில்லை. ஏப்ரலில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என முதலீட்டாளர்களை அச்சப்படவைக்க அரசியல்வாதிகள் முயல்கின்றனர். கடந்த வருடத்திலும் இவ்வாறு பல்வேறு மாதங்களை குறிப்பிட்டனர்.

பொருளாதார ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு பொருளாதர நன்மைகள் சென்றடைய வேண்டும். இந்த வருடம் 31 000 வீடுகளை நிர்மாணிக்க இருக்கிறோம். வீடற்றவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். டித்வா சூறாவளி காரணமாக மேலும் 20 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. 6000 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. சுமார் 15 ஆயிரம் வீடுகள் மீளக் குடியேற உகந்தவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 51 ஆயிரம் வீடுகளை கட்ட வேண்டியுள்ளது.

பாதைகளை அமைப்பதற்காக மாகாண சபைகளுக்கு 15000 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமிய வீதிகள் அதன் ஊடாக நிர்மாணிக்கப்படும். கிராமிய வீதிகளை நிர்மாணிக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 25 000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்க இருக்கிறோம். அதில் அரசாங்கம் 4 சதவீத வட்டியை ஏற்கும். பல்வேறு வகைகளில் வீடுகள், பாதைகளை நிர்மாணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான கடன் வழங்க 96 000 மில்லியன் ஒதுக்கியுள்ளோம். கிராமிய இளைஞர்களுக்கு தமது திட்டங்களை முன்வைத்து பணம் பெறலாம். வங்கிகளின் ஊடாக கைத்தொழில்களுக்கு கடன் வழங்க ஆலோசனை வழங்கியுள்ளோம்.

73 ஆயிரம் பேரை அரச சேவைக்கு உள்வாங்க அனுமதி கிடைத்துள்ளது. 23 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பொலிஸிற்கு 10000 பேரை இணைத்துக்கொள்ள இருக்கிறோம். இந்த வகையில் பொருளாதார வெற்றியை கிராமங்கள் வரை விஸ்தரிக்க பல்வேறு திட்டங்களை தயாரித்து வருகிறோம்.

டித்வா சூறாவளியின் போது வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.

டித்வாவிற்காக மேலும் 50000 கோடி ரூபா ஒதுக்கினோம். இழப்பீடு வழங்கும் தொகைகளை அதிகரித்தோம். இதற்காக பணம் அச்சிட வில்லை. திறைசேரியில் இருக்கும் நிதியே பயன்படுத்தப்பட்டன. திறைசேரிக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து பணத்தையும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வறுமையை ஒழிக்க வேண்டும். வறுமை என்பது சமூக அவலமாகும். பொருளாதாரத்தின் நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம். இந்த வருட சம்பள அதிகரிப்பிற்கு 11 000 கோடி ஒதுக்கியுள்ளோம்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *