நாடு தழுவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வார திட்டங்கள் ஆரம்பம்!
“நாடே ஒன்றிணைவோம்” எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புச் செயற்திட்டத்தின் கீழ்,
“நாடே ஒன்றிணைவோம்” எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புச் செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் பல்வேறு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதன் ஊடாக, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த காலங்களில் போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பது முழுச் சமூகத்தையும் அழிவை நோக்கி இட்டுச் செல்லும் ஒரு சமூகப் பேரழிவாக உருவெடுத்திருந்தது. குறிப்பாக, நாட்டின் இளைஞர் சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் நாளுக்கு நாள் போதைப்பொருளுக்கு இரையாகும் ஒரு சூழல் உருவாகியிருந்தது. போதைப்பொருள் சுற்றிவளைப்புகளின் போது கண்டறியப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இத்தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
இதனை ஒரு சமூகப் பேரழிவாகக் கருதிய தற்போதைய அரசாங்கம், போதைப்பொருளை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான தேசியத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. போதைப்பொருள் வலைப்பின்னல் ஊடாக நாட்டின் சிறுவர்கள் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு சமூகச் சீரழிவுகள் ஏற்படும் பின்னணியில், போதைப்பொருள் சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் விளைவாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவிலான போதைப்பொருட்களைக் கைப்பற்ற முடிந்துள்ளது. முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுக்கும் இந்த சுற்றிவளைப்புகள் மூலம், போதைப்பொருள் வலைப்பின்னலை இயக்கும் முக்கிய நபர்களை அடையாளம் காண முடிந்ததுடன், வெளிநாடுகளில் இருந்து இந்த வர்த்தகத்தை முன்னெடுக்கும் நபர்களை இலங்கைக்கு அழைத்து வரவும் பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் மற்றுமொரு திட்டமாக ‘போதைப்பொருள் ஒழிப்பு வாரம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையங்களை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பாடசாலை மட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், போஸ்டர் கண்காட்சிகள், துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் கருத்தரங்குகள் என்பன அவற்றில் உள்ளடங்குகின்றன. அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது தொடர்பாகவும் இங்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
“நாடே ஒன்றிணைவோம்” தேசிய போதைப்பொருள் ஒழிப்புச் செயற்திட்டத்திற்கு இணையாக, வரகாபொல பொலிஸாரினால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் வரகாபொல நகரில் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் வரகாபொல பொலிஸ் நிலைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல், போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கந்தளாய் நகரிலும் விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அங்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.