10 ஆண்டுகளாக முடங்கிய வீடமைப்பு – அமைச்சரிடம் கடும் கேள்வி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பத்து வருடங்களாக பூர்த்தியாகாமல்........
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பத்து வருடங்களாக பூர்த்தியாகாமல் கைவிடப்பட்டுள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகளை உடனடியாகக் கட்டி முடிப்பதற்கான கால அட்டவணையை சமர்ப்பிக்குமாறு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலகவிடம் பாராளுமன்றத்தில் இன்று வலியுறுத்தப்பட்டது.
இன்றைய பாராளுமன்ற கேள்வி-பதில் நேரத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய வீட்டுத் திட்டங்களின் அவல நிலை குறித்துக் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் இப்பிரச்சினையை முன்வைத்து அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பினார்.
குறிப்பாக 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் மண்முனை மேற்கு மற்றும் வவுனதீவு போன்ற பின்தங்கிய பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாதிரி கிராமத் திட்டங்கள், இன்றுவரை கூரை மட்டத்திலும் அடித்தள மட்டத்திலும் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
2020 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர், அரசியல் காரணங்களுக்காகவே இந்த வேலைத்திட்டங்கள் முடக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் மட்டக்களப்பு மக்களின் இந்த அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்ய எந்தவித உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. தற்போது நடைமுறையிலுள்ள “ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு” என்ற திட்டம், ஏற்கனவே பாதியில் நிற்கும் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குத் தீர்வாக அமையாது என்பது சபையில் வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 133 மாதிரி கிராமங்கள் (Model Villages) இன்னும் முழுமையடையாமல் உள்ள நிலையில், வவுனதீவு மற்றும் வாகரை போன்ற வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் பெரும் கடன் சுமையுடன் இந்த அரைகுறை வீடுகளில் வசித்து வருகின்றனர். இது குறித்து அமைச்சர் வழங்கிய பதிலில், நிதி கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதைச் சாடிய உறுப்பினர், ஒரு அமைச்சராக வெறுமனே நிதியைக் கோருவது மாத்திரம் போதாது என்றும், 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் இந்த வீடுகளைப் பூர்த்தி செய்யப் போகும் துல்லியமான வேலைத்திட்டத்தையும் காலக்கெடுவையும் சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வீடுகள் எப்போது முழுமையாக ஒப்படைக்கப்படும் என்ற நேரடி வினாவிற்கு முறையான கால அட்டவணை அவசியம் என்பதை வலியுறுத்தியதுடன், பின்தங்கிய பிரதேச மக்கள் மீது விசேஷ கவனம் செலுத்துமாறும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.