இருதரப்பு ஒப்பந்தம் : தனிப்பயன் திறன் மேம்பாட்டு பயிற்சி
இலங்கை விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள்.......
இலங்கை விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத்தைச் (AASL) சேர்ந்த 10 விமான நிலைய முகாமையாளர்கள், இந்தியாவில் தமது விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
புதுடில்லியில் உள்ள புகழ்பெற்ற இந்திய விமானப் போக்குவரத்து அகாடமியில் (Indian Aviation Academy – IAA) கடந்த மார்ச் 09ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இந்தப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தர அங்கீகாரம் பெற்ற இந்த அகாடமி, விமானத் துறையின் கல்வி மற்றும் ஆய்வுகளில் முன்னணியில் திகழ்கிறது.
இந்த ஒத்துழைப்பானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் ஒரு மைல்கல்லாகும். 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இலங்கை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் 700 பயிற்சி இடங்களை வழங்குவதாக அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் இந்தியப் பயணத்தின் போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ், தற்போது ஆண்டுதோறும் சுமார் 300 இலங்கை அரச அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.