வேகப்பந்து வீச்சாளர் லதுர்சனை நேரில் சந்தித்து சாணக்கியன் வாழ்த்து
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரர் அழகராஜ் லதுர்சன்........
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரர் அழகராஜ் லதுர்சன், தேசிய அளவிலான வேகப்பந்து வீச்சாளர் தெரிவில் சாதித்து ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரை கௌரவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ‘வேகப்பந்து வீச்சாளர்கள் தெரிவு’ போட்டியில், மட்டக்களப்பைச் சேர்ந்த அழகராஜ் லதுர்சன் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி முதற்கட்டத்திலேயே தெரிவாகியுள்ளார்.
சுமார் 3500-க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் பங்கேற்ற இந்த கடும் போட்டியில், லதுர்சன் தனது அபாரமான பந்துவீச்சு திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக, மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி தனது தனித்துவத்தை அவர் நிரூபித்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் லதுர்சனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை கௌரவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர்:
“3500 வீரர்களில் ஒருவராக எமது மண்ணைச் சேர்ந்த லதுர்சன் தெரிவாகி இருப்பது மட்டக்களப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. அவரது உழைப்பும், உறுதியும் என்னை வியக்க வைக்கிறது. மட்டக்களப்பிலும் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் உருவாக முடியும் என்பதற்கு இது ஒரு சான்று. எதிர்காலத்தில் அவர் இலங்கை தேசிய அணிக்காக விளையாடி எமது மண்ணுக்கு புகழைத் தேடித்தருவார் என்று நம்புகிறேன்,” எனத் தெரிவித்தார்.
இளம் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் லதுர்சனின் இந்த வெற்றி, மட்டக்களப்பு விளையாட்டுத் துறையில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.