சடலம் மீது துஷ்பிரயோகம்!

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த

Published March 3, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதான யுவதியொருவர் உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிர்மாய்ப்பு செய்து கொண்ட யுவதியின் சடலம் அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி “பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம், வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை வெளிக்கொண்டுவா” போன்ற கோஷங்களையெழுப்பியும் பதாதைகளையும் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அவ்வேளையில், ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்துக்கு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உட்பட ஏனைய வைத்தியர்களும் வருகை தந்ததுடன் வைத்திய அதிகாரி பஷ்லி சம்பவம் குறித்து குறிப்பிடுகையில், “உயிர்மாய்ப்பு செய்து கொண்ட யுவதியின் சடலமொன்று கடந்த 25ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. குறித்த சடலம் முதல் நாள் பிரேத அறையில் இருந்த நிலையினை விட மறு நாள் வேறு ஒரு நிலையில் காணப்படவில்லை. ஆனால் இது தொடர்பாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

பிரேத அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவினை நாங்கள் பரிசோதித்து பார்த்தோம். அப்போது அந்த சிற்றூழியர்கள் மூவரும் பிரேத அறைக்கு சென்றுவந்த காட்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பாக நாங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்” என்றார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *