எமது உரிமை எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது – சாணக்கியன்!

0

எமது உரிமை எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் நேற்று( வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டணங்கள்.

போர் வெற்றியை கொண்டாடும் பறைசாற்றும் தூபிகள் மற்றும் சின்னங்கள் வட மாகாணத்தில் பல இடங்களில் காணப்படும் அதேவேளை இறுதி யுத்தத்தில் இறந்து போன எமது உறவுகளை நினைவு கூறும் தூபிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

இதன்மூலம் அவர்கள் எதனை வலியுறுத்த முயல்கின்றனர். இதில் கூட எமக்கான எமது மக்களுக்கான உரிமை இல்லையா. ஆட்சி மாற்றமும் அடிப்படை உரிமையில்லா அபிவிருத்திக்கான மாற்றமே இதற்கான காரணம்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.