வவுனியாவில் பட்டாசு வாகனம் தீக்கிரை
வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில்
வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் சப்பறத் திருவிழா நேற்று இரவு இடம்பெறவிருந்தது.
இந்நிலையில், சப்பற திருவிழாவின் போது வெடி கொளுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை இறக்கிக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது வாகனத்தில் இருந்த பட்டாசுகளும் வெடித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததையடுத்து, தீயணைப்பு பிரிவினரும் ஆலயத்தில் நின்ற மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும், பட்டா ரக வாகனத்தின் பின்பகுதி முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இது தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
