மடு அன்னையின் ஆவணி திருவிழா ஆரம்பம்.
மன்னாரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா தேவாலயத்தின்...
மன்னாரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (15) ஆரம்பமானது.
ஆசீர்வாத ஆராதனையுடன் இன்று காலை 6:15 மணிக்கு திருவிழா தொடங்கியது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த திருப்பலியில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க, இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் அன்ரன் வைமன் குரூஸ், மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து கலந்து கொண்டு ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து, திருச்சொரூப பவனியும் திருச்சொரூப ஆசீர்வாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக் கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் மடு தேவாலயத்தில் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
