பல மாவட்டங்களில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்புகளைப் பொறுத்தமட்டில், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும்.




