நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!

இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி (ஈத்-ஏ-மீலாத்) தினம் இன்றாகும் (26).
இஸ்லாமிய நாட்காட்டியான ஹிஜ்ரியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் நிலவு தென்படுவதன் அடிப்படையில் இந்த புனித நாள் தீர்மானிக்கப்படுகிறது.
கி.பி 570-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
தொடக்க காலத்தில் இந்நாள் அவரது மறைவை நினைவுகூரும் அமைதியான நாளாகவே கருதப்பட்டது.
பின்னர் 10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் பாத்திமித் ஆட்சியாளர்களின் காலத்தில், நபிகளாரின் வாழ்க்கை வரலாறு, போதனைகள் மற்றும் இறை வழிபாடுகளை முன்னிறுத்தி பொது நிகழ்வாகக் கொண்டாடத் தொடங்கப்பட்டது.
காலப்போக்கில் இது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் தங்களது ஆன்மீக நெறிமுறைகளைப் புதுப்பிக்கும் சிறப்புமிக்க நாளாக மாறியது.
மிலாது நபி என்பது வெறும் பண்டிகை மட்டுமே அல்லாமல், நபிகள் நாயகம் மனிதகுலத்திற்குப் போதித்த அன்பு, அமைதி, கருணை, நேர்மை மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை மீண்டும் நினைவுகூரும் புனித நாளாகும்.
இஸ்லாமிய ஒழுக்க நெறியை நிறுவுவதில் முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார்.
அக்கால சமூகத்திற்கு இஸ்லாத்தின் செய்தியை முன்வைப்பதில் நபிகள் நாயகம் கடுமையான துன்பங்களை அனுபவித்தார். அத்தகைய தருணங்களிலும் கூட, அவர் பொறுமையையும் மௌனத்தையும் கடைபிடித்திருந்தார்.
பிளவுபட்ட அரபு சமூகத்திற்குப் பதிலாக, இஸ்லாத்தின் அடிப்படையையும் அர்த்தத்தையும் சுமக்கின்ற, சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் கொண்டு உன்னத விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க, 23 வருடங்களாக, முஹம்மத் நபிகள் நாயகம் தனது பிரசங்கம், செயற்பாடுகள், தியாகம் மற்றும் வாழ்க்கை முன்மாதிரி மூலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இந்நிலையிலேயே அவரது பிறந்த நாளை நினைவுகூறும் இந்த புனித நாளில் ஏழை எளியவர்களுக்கு உதவுதல், பசித்தோருக்கு உணவளித்தல் மற்றும் மனிதநேயப் பணிகளை மேற்கொள்வது முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




