இன்றைய வானிலையில் மழையும் பலத்த காற்றும்!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அந்த திணைக்களம் இன்று (30) அதிகாலை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்பதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதேவேளை சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஒகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையாகவுள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.
இன்று (30) பகல் 12:11 மணிக்கு மன்னார், பெரியமடு, புளியங்குளம், வெலிஓயா மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.




