பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம்!

மலையகத்தின் தந்தை என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, கொழும்பில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட பிரதித் தலைவர்களான கணபதி கனகராஜ், அனுசியா சிவராஜா தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், உப தலைவர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் ஐயாவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தப் பின்னர் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
மேலும், கொட்டகலை சி.எல்.எப். வளாகம் உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனன தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் போராடிய தலைவராக விளங்கினார்.
இலங்கை இந்திய காங்கிரஸின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர், அதன் தலைவராகவும் செயற்பட்டார். பின்னர் இலங்கை இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றதன் பின்னரும் அதன் தலைவராக இருந்து மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த அவர், மலையக மக்களின் மட்டுமல்லாது இலங்கையின் சிறந்த தேசியத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.




